Search This Blog

Jun 9, 2012

சம்பிக்க , எல்லாவல,விமல் ,குணதாச ஆகியோர் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளந்த நடவடிக்கைகளாக கொண்டுள்ளார்கள்.
இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்பு கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்த கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொழும்பு மாவட்ட மாகாணசபை, கொழும்பு மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கட்சி தலைமைமையகத்தில் இன்று நடைபெற்றபோது, உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பல மொழிகள் பேசி, பல மதங்களை கடைப்பிடித்து, பல இன மக்கள் சேர்ந்து வாழும் இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்க வேண்டும் என்பதே இந்த நால்வரின் கூட்டுத்திட்டம்.
அதி தீவிர தமிழ், முஸ்லிம் தேசியவாதங்கள் எப்படி தமிழ், முஸ்லிம் மக்களை நாசாமாக்குகின்றதோ, அதைவிட அதிகமாக இந்த சிங்கள பெளத்த தீவிரவாதம், முழு நாட்டையுமே நாசமாக்குகின்றது. இதன் காரணம் சிங்கள பெளத்த தீவிரவாதம், இராணுவ பலத்துடன் சேர்ந்து கொண்டுள்ளது. புலிகளின் இராணுவ தோல்வியை, தமிழ் பேசும் மக்களின் தோல்வியாக மாற்றிக்காட்டி, முழு நாட்டையும் சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்குவது என்ற திட்டம் வெற்றிகரமாக இன்று முன் கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு முழு தேசத்திற்கும் தலைமை தாங்கக்கூடிய ஒரு தேசிய கட்சியின் பிரபல தலைவன், சிங்கள மக்கள் மத்தியில் தூரதிஷ்டவசமாக இன்று இல்லை. சிறிய தேசிய இனங்கள், மத-மொழி சிறுபான்மை மக்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, விளாடிமிர் லெனின், ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோர் பக்கத்தில் அல்ல, தூரத்தில் வைக்கக்கூட இங்கு எவரும் கிடையாது.
இனங்களுக்கு மத்தியிலான பிரச்சினைகள் என வரும் பொழுது அனைவரும் நழுவல் அரசியல்தான் செய்கிறார்கள். கடந்த கால தமது பேரினவாத குற்றங்களை சுட்டிக்காட்டி சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்லும் எந்த ஒரு பிரபல சிங்கள தலைவனும் இங்கு இன்று இல்லை. அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்லும் அரசியல் இங்கு இல்லை. அதிகாரத்தையும், இறைமையையும் பகிந்துகொள்வதில் உள்ள நன்மைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும் ஒரு தலைவன் இங்கு இல்லை. இது மிகவும் வெட்ககேடான, கேவலமான நிலைமையாகும்.
தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் சிங்க கொடியை கையில் எடுத்து, நாம் ஐக்கிய இலங்கைக்குள் வாழத்தயார் என சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும்கூட இவர்கள் நம்ப தயார் இல்லை. அதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லி, அந்த நல்லெண்ண சமிக்ஞையை புறக்கணித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் நமது ஜனநாயக போராட்டத்தை, முற்போக்கு சிங்கள சக்திகளுடன் இணைந்து, உலக சமுதாயத்தின் ஆதரவுடன் முன்னெடுப்பதை தவிர வேறு வழி இல்லை.
இந்த இனவாத அரசாங்கத்திற்கு தன்மானமுள்ள நாம் ஒருபோதும் ரகசிய ஒத்துழைப்பு வழங்க முடியாது. அதேவேளையில் நாம் வானத்தில் கோட்டை கட்டவில்லை, நாம் யதார்த்த அரசியலும் செய்ய தயார் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும். அரசாங்கம் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வருமானால், ஏனைய எதிர்கட்சிகளுடன் இணைந்து, கூட்டாக அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் கிடையாது. இது எமது பகிரங்க நிலைப்பாடு. இவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
Thanks:lankamuslim:

Jun 7, 2012

இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி


அபூ காஸி
எகிப்தில் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி மீண்டும் பிரகாசிக்கிறார் . இவரின் வெற்றி புதிய எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளில் அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , முர்ஸியின் வெற்றி இலங்கை தம்புள்ளை வரையிலும் அதன் தாக்கத்தை கொண்டிருக்கும் என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்றல்ல.அந்த வகையிலும் முர்ஸி பற்றி தெரிந்து கொள்வது இலங்கை அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது .
எகிப்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் எவருக்கும் 50 வீதத்திக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வில்லை. 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி பல முன்னணி சர்வதேச நோக்கர்களின் எதிர்வு கூறல்களை பொய்ப்பித்து வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் . தேர்தலில் முஹம்மது முர்ஸி 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்றார் . இரண்டாவது இடத்தை முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் எவரும் எதிர்பார்க்காத விதமாக 55 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் . அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை 48 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பெற்றுள்ளார் .
மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட எகிப்து ஜனாதிபதி தேர்தலில் எவரும் ஐம்பது வீத பெரும்பான்மையை பெறவில்லை இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களான இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி , முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் ஆகிய இருவரும் க்க வில்லை போட்டியிடவுள்ளனர் .
இரண்டாம் கட்ட தேர்தலில் 58 லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு சலபிகள்  அமைப்பு தமது ஆதரவை தெரிவித்துள்ளது . அதேவேளை 41 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ளது. அதேவேளை அஹ்மத் ஷபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் அந்த அமைப்புக்கள் வர்ணித்துள்ளது .
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள ஆயுள் தண்டனையை அந்த அமைப்புகள் ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்று தெரிவித்துள்ள . முஹம்மது முர்ஸி அதிகாரத்தை கைப்பற்றினால் மீண்டும் ஹுஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ”நீதிமன்ற தீர்ப்பு” வழங்கப் படவேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கோரிவருகிறது . இதற்கு முஹம்மது முர்ஸியும் உடன்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் இடம்பெறவுள்ளது . இது தொடர்பாக நான் கடந்த மாதம் 15 ஆம் திகதி தொகுத்து விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆக்கத்தை lankamuslim.org க்கு சில மாற்றங்களுடன் தருகிறேன் .
எகிப்து இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளரான முஹம்மத் முர்ஸி இன்றை எகிப்து ஜனாதிபதி தேர்தல் களத்தில் அதிகள் பேசப்படும் நபர். எகிப்து அரசியல் வெளியில் மின்னும் தாரகை. இவர் எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகில் பரவலாக எதிர்பார்க்கப் படும் எகிப்தின் எதிர்கால ஜனாதிபதி. மீண்டும் எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ,17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
கலாநிதி முஹம்மது முர்ஸி , இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவில் முன்னாள் உறுப்பினரான இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவர். கலாநிதி முஹம்மது முர்ஸி 2000-2005 ஆண்டுகால பகுதில் பாராளுமன்ற மக்கள் சட்டமன்றத்தில் இஹ்வான் அணியின் பாராளுமன்ற தலைவராக கடமையாற்றியுள்ளார்.
இவர் எகிப்து சகஜிக் (Zagazig University) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பருப்பொருள் அறிவியல் துறையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் ஆய்வு அறிவியல் துறைக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார் .
முஹம்மத் முர்ஸி ஈஸா அல் இயாத் என்பது அவரது முழுப் பெயர் எகிப்தின் ஷர்க்கிய்யா மாகாணத்தின் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 1978 இல் அதே பல்கலை கழகத்தில் இருந்து உலோக தொழிற்கலை பொறியியல் முதுகலைப்பட்டம் (Master of Engineering degree in Metallurgy) பெற்றார். அவர் மேற்கொண்டு, 1982 இல் அமெரிக்க தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் (PhD) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் ஒரு சிறந்த விரிவுரையாளராகவும், ஒரு ஆசிரியர் உதவியாளராகவும் , கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் (Assistant Professor) பணியாற்றியுள்ள இவர் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக் (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் சாகஜிக் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பணியாளர்கள் கிளப் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிழும் (NASA) கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடியது.
இவர் பேராசிரியராக கடமையாற்றிய போது அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச மாநாடு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். எகிப்திய சியோனிச திட்டங்களை எதிர்க்கும் அமைப்பின் இஸ்தாபக -உறுப்பினராகவும் விளங்கும் இவர் தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் தனது கடின உழைப்பினால் சிறந்து விளங்கியுள்ளார்.
கலாநிதி முஹம்மது முர்ஸி பல்வேறு அறிவியல் துறைகளில் இருந்து தனது சிறப்பான திறமைகள் மற்றும் திறன்களை நிரூபித்து அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க , தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் (practical production solutions) தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும் .
அவர் ஆரம்ப எண்பதுகளில் விண்கலம் இயந்திரங்கள் மேம்பாட்டியல் அறிவியல் துறையில் நாசாவில் பணியாற்றிய போது “உலோகங்களில்”, “metal surface treatment” என்ற துறையில் அதிகமான ஆய்வுகள் செய்துள்ளார். .
அதேவேளை சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்துள்ளார் .இந்த நிலைப்பாடு காரணமாக, கலாநிதி முஹம்மது முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர், கலாநிதி முஹம்மது முர்ஸி அப்பட்டமான தேர்தல் மோசடி எதிராக சுதந்திரம் கோரிய நீதிபதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வழிநடத்தினார். இதன் விளைவாக, இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க 500 உறுப்பினர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். மத்திய கெய்ரோவின் வட கெய்ரோ நீதிமன்றம் மற்றும் அல் ஜலா கோர்ட் வளாகம் முன் எதிர்ப்பு ஆர்பாட்டயங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஈடுபட்டபோது மே 18, 2006 காலை இவர் கைது செய்யப்பட்டு . சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
எகிப்து முழுவதும் முன்னாள் சர்வாதிகாரிக்கு எதிரான ஆர்பாட்டங்களை அடக்க ‘கோபத்தின் வெள்ளியன்று’ “Friday of Anger” இஹ்வான்கள் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றுவதை தடுக்க ஆட்சியாளர் இவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். பல சிறைச்சாலைகளில் ஆர்பாட்ட காரர்களால் உடைக்கப்பட்டன பல கைதிகள் தப்பி சென்றனர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்குகளை பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். நீதித்துறை அதிகாரிகள் சிறைக்கு வந்து சிறையில் முஸ்லீம் சகோதரத்துவ தலைவர்கள் எந்த சட்ட காரங்களுகாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் கோரிக்கை முன்வைத்தார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.
கலாநிதி முஹம்மது முர்ஸி பல வதைகளை அனுபவித்தார். அவர் மட்டுமல்ல. சர்வாதிகார ஆட்சியாளர் ஹுசனி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் , 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்துள்ளார் .
கலாநிதி முஹம்மது முர்ஸி பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்பான அரசியல் சேவையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அவர் இஹ்வான் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவின் உறுப்பினராக அதன் சூரா சபையால் தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 25 புரட்சிக்கு பின்னர், இஹ்வான்களினால் சுதந்திரதற்கும் நீதிக்குமான அரசியல் கட்சி நிறுவப்பட்டது போது அதன் தலைவராக அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் சூரா அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள ,செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். .
கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான்களின் அரசியல் திட்ட முகாமையில் அளப்பெரிய பங்காற்றியுள்ளார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்க மறுசீரமைப்பு பணியில் இவரின் பங்களிப்பு பெரிதும் பேசப்படுகிறது. 2007ஆம் ஆண்டு இஹ்வான்கள் வெளியிட்ட அரசியல் வேலைத்திட்ட அறிக்கையிலும் இவரின் பங்களிப்பு பெரிதும் இருந்துள்ளது.
இன்று மீண்டும் எகிப்தில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் இரு வாரங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் – என்பதுடன் இலங்கை அரசியலிலும் அவரின் வெற்றி தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்.
Thanks: Lankamuslim.

المشاركات الشائعة