Search This Blog

Jun 26, 2011

அஞ்சுவன்னத்தார்- சோனக முன்னோருக்கான ஓர் சான்று


அஞ்சுவன்னம் என்போர் பண்டைய காலத்தில் இந்தியாவின் தென்பகுதியிலும் இலங்கையிலும் செயற்பட்ட ஒரு வர்த்தகப் பிரிவினராக அறியப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் பற்றிய முதல் பதிவு கி.பி.849ல் இடம்பெற்றிருப்பதாகக் கருதப்படுகின்றது.
“அஞ்சுவண்ணம் பற்றிய குறிப்புகள் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள சாசனங்களிற் காணப்படுகின்றன. பந்தலாயினி கொல்லம், குரக்கேணி கொல்லம், தித்தாண்டபுரம், மயிலாப்பூர், கிருஷ்ணா பட்டணம், விசாக பட்டணம் முதலிய கரையோரப் பட்டினங்களில் அஞ்சுவண்ண வணிகர் இருந்தனர். அவர்களைப் பற்றிய காலத்தால் மிகமுற்பட்ட குறிப்புகள் சேரநாட்டுச் செப்பேடுகளிற் காணப்படுகின்றன.
அவற்றிலொன்று ஸ்தாணு ரவியின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி.849) எழுதப்பட்டது…..” (பேரா.சி.பத்மநாதன். “இலங்கைத் தமிழ் சாசனங்கள்.” பக்.159)அஞ்சுவன்னம் பற்றிய குறிப்புக்களும், அவர்களைப் பற்றிய அர்த்தப்படுத்தல்களும் குழப்பகரமானதாக இருந்து வந்திருக்கின்றன.
பேராசிரியர். ம.மு.உவைஸ் அவர்களும் அஞ்சுவன்னம் பற்றிக் குறிப்பிடுகின்றார். “இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்” என தான் அடையாளப்படுத்திய நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் அவர் மேற்கொண்ட அரிய முயற்சியின் ஒரு பக்க விளைவாக, அவர் அஞ்சுவன்னத்தார் பற்றிய குறிப்புக்களை அறிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றார்.
“பல்சந்தமாலையில் முஸ்லிம் மக்களைக் குறிப்பிட யவனர், சோனகர், அஞ்சுவண்ணத்தார் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன…..”(பேரா.ம.மு.உவைஸ். “இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு” பக். 94)தற்செயலாக அமைந்த இந்த அற்புத அனுபவம், இலங்கை மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வில் ஒரு திருப்பமாக அமையக் கூடியதாக இருக்கின்றது.
இந்த முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக மிகுந்த கரிசனை கொண்டிருந்த பேராசிரியர் உவைஸ் அவர்கள், அஞ்சுவன்னத்தாரினூடாக, இத்தகைய பூர்வீகத் தேடலில் ஒரு வெளிச்சம் கிடைக்குமா என முயற்சித்தார்.“சென்னைப் பலகலைக்கழக தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதுபோல் அஞ்சுவன்னத்தார் என்பதுதான் சரியானதெனக் கொண்டால், அதனை அம் சுவனம் அத்து ஆர் எனப் பிரிக்கலாம். அவ்வாறாயின் அழகிய சுவனத்துக்கு உரிமை உடையவர் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம் அல்லவா?….”  (பேரா.ம.மு.உவைஸ். மே.நூ. பக். 100).
அஞ்சுவண்ணம் மற்றும் அஞ்சுவன்னம் என்று இருவடிவங்களில் இவர்கள் குறிக்கப்பட்டிருப்பதால், பேரா. உவைஸ் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி குறிப்பிடுகின்ற அஞ்சுவன்னம் என்ற சொல்லை ஆதாரமாகக் கொண்டு அவர்களை சுவனத்தக்குரியவர்கள் என அர்த்தம் கொள்கின்றார்.இதன் பின்னர் இந்த அஞ்சுவன்னத்தார் குறித்து முஸ்லிம் ஆய்வாளர்கள் யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. இந்நிலையில், பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள், “இலங்கைத் தமிழ் சாசனங்கள்” என்ற நூலில் அஞ்சுவண்ணத்தார் பற்றிய ஒரு பரிசீலனையை முன்வைக்கின்றார்.
இவரது பரிசீலனையானது, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை விசாரிப்பதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிராதபோதிலும், இவரது குறிப்புக்கள், பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்களின் பரிசீலனைகளிலும் பார்க்க ஆழமானதாகவும், தகவல் செறிவுமிக்கதாகவும் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 14ம் நூற்றாண்டு வரை இலங்கையின் வர்த்தகத்தில் சிறப்பான பாத்திரம் வகித்து வந்ததாகக் கருதப்படுகின்ற தென்னிந்திய தமிழ் வர்த்தகர்களின் வாணிபமானது அதன் பின்னர் எவ்வாறு முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள், அல்லது செல்வாக்கிற்குள் வந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது, அஞ்சுவண்ணத்தார் என்ற வர்த்தக் கணம் தொடர்பாக அவர் தனது அக்கறையைக் குவித்திருந்தார்.
“அஞ்சுவண்ணம் என்ற வணிக கணத்தவருக்கும் ஐந்நூற்றுவருக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவது இங்கு அவசியமாகின்றது. இலங்கையில் வாணிபம் 14 ஆம் நூற்றாண்டு முதலாகப் பெருமளவிற்கு ஐந்நூற்றுவரிமிருந்து இஸ்லாமிய வணிகரிடம் கைமாறுவதற்கு அத்தொடர்புகளும் காரணமானவை போலத் தெரிகின்றது.” (பேரா.சி.பத்மநாதன். மே.நூ. பக்.159).
முற்றிலும் வேறொரு நோக்கத்திற்காக முன்வைக்கப்பட்ட அஞ்சுவண்ணத்தார் பற்றிய குறிப்புக்கள், உண்மையில் இலங்கை மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவத்திற்குரியதாக அமைந்திருக்கின்றது. இலங்கையின் மீது தமிழர்கள் கொண்டிருந்த வரலாற்றுபூர்வ செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கத்தில் பேரா. சி. பத்மநாதன் அவர்களினால் எழுதப்பட்ட இவ்வாய்வுக் கட்டுரையில், அஞ்சுவண்ணத்தார் பற்றி குறிப்பிட வேண்டியதென்பது ஒரு தவிர்க்க முடியாத அவசியமாக அமைந்திருந்தது.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்குள்ள அதாவது சோனகர்களுக்குள்ள முக்கியத்துவத்தை எந்தவகையிலும் வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதில் கிட்டத்தட்ட சகல சிங்கள, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்ற அதே ஒத்த தன்மையை பேரா.சி.பத்மநாதன் அவர்களும் தமது எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும், இந்த தவிர்ப்பையும் மீறி, அஞ்சுவண்ணத்தார் பற்றி குறிப்பிடுவது அவருக்குத் தவிர்க்க முடியாததாகி விட்டது.
யார் இந்த அஞ்சுவன்னத்தார்?
“இவற்றையெல்லாம் ஆராய்ந்த சதாசிவ பண்டாரத்தார் கோட்டயம், தீர்த்தாண்டதானபுரம், நாகப்பட்டினம் முதலான கடற்கரைப் பட்டினங்களில் முற்காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் வணிகர் குழுவே அஞ்சுவண்ணம் என்று செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் பெற்றுள்ளது என்பது நன்கு புலப்படுதல் காண்க.” (பேரா.ம.மு.உவைஸ். மே.நூ. பக். 97)
“களவியற்காரிகை என்னும் நூலின் உரையிலே பல்சந்திமாலை என்னும் நூலின் செய்யுள்கள் சில மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றிலே அஞ்சுவண்ணம் என்போர் யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
மேலும் அவர்கள் அல்லாவை வழிபடுவோர் என்றும் கலுபதி(கலீபா)யைப் பின்பற்றுவோர் என்றும் அவற்றிலே சொல்லப்படுகின்றது.
பல்சந்திமாலை எழுதப்பட்ட காலத்தில் அஞ்சுவண்ணத்தவர் தமிழகத்திலே இஸ்லாமியர் என்று கருதப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது” (பேரா.சி.பத்மநாதன். மே.நூ. பக்.161).
அஞ்சுவன்னத்தார் என்பவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. எனினும் இந்த முஸ்லிம்கள் யார், இவர்களின் பூர்வீகம் என்ன என்பவை பற்றிய தெளிவான பரிசீலனைகள் யாராலும் முன்வைக்கப்படவில்லை. பேரா. சி.பதமநாதன் இவர்களை மத்திய கிழக்கு மூலத்தைக் கொண்டவர்களாகக் கருதுகின்றார்.
“அஞ்சுவண்ணம் என்பது ஹஞ்ஜமான என்ற பாரசீகச் சொல்லின் தமிழாக்கம் எனச் சிலர் கொள்வர். ஹம்யமான என்றவொரு வணிகர் குழுவினைப் பற்றி கன்னட சாசனங்கள் சில குறிப்பிடுகின்றன. விஜய நகரத்து முதலாம் தேவராயரின் சாசனமொன்று (கி.பி. 1427) உம்மா மரக்கல என்னும் ஒருவரை ஹஞ்ஜமான முக்ய என வர்ணிக்கின்றது.
இக்குறிப்பு பாரசீகரான கப்பலோட்டி ஒருவரைப் பற்றியதாகலாம். அராபியர், பாரசீகர், சிரிய கிறிஸ்தவர்கள் என்போர் அடங்கிய ஒரு வணிக கணமாக அஞ்சுவண்ணம் ஒரு காலத்தில் அமைந்திருந்ததென்று கருதலாம்” (பேரா.சி.பத்மநாதன். மே.நூ. பக்.160).
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் அரேபிய அல்லது மத்திய கிழக்கு வழித்தோன்றல்கள் என்பதை தரப்பட்ட உண்மையாகக் கொள்ளும்போது, இந்த முஸ்லிம்கள் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பதிவையுமே இத்தகைய அரேபிய அல்லது மத்திய கிழக்கு மூலத்தின் அடிப்படையில் விளக்குவது எளிதான காரியமாகி விடும்.
நூற்றாண்டுகளாக வரலாற்றுத்துறையையும், இலக்கியத்துறையையும் ஆக்கிரமித்திருக்கின்ற இத்தகைய கருத்தியல் போக்கின் விளைவாக, தமிழ் அறிஞர்கள், பிறநாட்டு அறிஞர்கள் என்போர் மட்டுமின்றி, முஸ்லிம் அறிஞர்களும் கூட, இலங்கை மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களின் பூர்வீகத்தை இதற்கு அப்பால் விரித்து நோக்க முடியாதவர்களாக இருந்து வந்திருக்கின்றார்கள்.
அஞ்சுவண்ணம் என்பதை ஹஞ்ஜமான என்ற பாரசிகச் சொல்லின் திரிபாகவோ அல்லது ஹம்யமான என்ற கன்னடச் சொல்லின் திரிபாகவோ கொள்வதில் பேரா. சி. பத்மநாதன் அவர்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை.
அவரது எழுத்துக்களில் காணப்படுகின்ற, சிறு விவரத்தையும் நுணுகி ஆராய்கின்ற தன்மை, அஞ்சுவண்ணம் பற்றிய குறிப்புக்களில் அறவே விடுபட்டு நிற்பதைக் காண்கிறோம். போகிற போக்கில், பெரிய அளவில் முக்கியத்துவமற்ற ஒரு விவரத்தை சொல்வது போன்ற தன்மையில் அஞ்சுவண்ணம் பற்றிக் குறிப்பிட்டு விட்டுச் செல்கிறார்.
ஆனால் உண்மையில் இது அவ்வளவு எளிமையானதோ அல்லது முக்கியத்துவமற்றதோ ஆன ஒரு விடயமல்ல. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால பூர்வீக வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களிடமிருந்து, சில நூறு ஆண்டுகள் என்ற வரலாற்றை மட்டுமே கொண்டிருந்த மத்திய கிழக்கு பூர்வீகத்தைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற முஸ்லிம்களிடம் வர்த்தக ஆதிக்கம் கைமாறியது தொடர்பான மிக முக்கியமான விடயம் இது.
பண்டைய காலத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டுமின்றி, தென்பகுதிகளிலும் தமிழர்களின், குறிப்பாக தமிழ் வர்த்தகர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது என்பதை நிரூபிப்பதற்கான நோக்கத்தில் ஒவ்வொரு சிறு விவரமும் நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளன. தென்னிலங்கையின் மூலை, முடுக்குகளில்கூட, தமிழ் வர்த்தகர்களின் செயல்பாடுகளின் குறியீடுகளாக அமைந்த சின்னங்கள், பதிவுகள், கல்வெட்டுக்கள்… போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ் வணிகர்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் (14ம் நூற்றாண்டில்) திடீரென்று மறைந்து, அவர்கள் இருந்த இடத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் கம்பீரமாக அமர்ந்திருப்பதைக் காண்கிறோம்.
வரலற்றாய்வாளர்களுக்கு வியப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்திருக்கின்ற இந்த நிலைமாற்றமானது, தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரை விளக்க முடியாத சிக்கலாகவும் அமைந்திருக்கின்றது.
எனவே இயன்றவரை அவர்கள் இத்தகைய விடயங்களைக் கண்டு கொள்ளாமால் தவிர்த்து விட விரும்புகின்றார்கள்.தர்க்கரீதியாகப் பார்ப்போம். இலங்கையில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் பண்டைய தமிழ் வணிகர்கள், தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள். அவர்களிடம் வர்த்தகப் பலம் மாத்திரமின்றி, அரசியல் ரீதியான பலமும் இருந்திருக்கின்றது.
தென்னிந்தியத் தமிழ் மன்னர்கள், கடல் கடந்து பல நாடுகளை வெற்றி கொள்ளும் அளவுக்கு பலம் பெற்றிருந்தார்கள். இந்நிலையில் கி.பி. 14ம் நூற்றாண்டில் இருந்து, இலங்கையில் தமிழ் வர்த்தகர்கள் வர்த்தக ரீதியாகச் செல்வாக்கிழந்து, அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம்கள் வாணிபத்தில் செல்வாக்குப் பெற்றமைக்கு ஏற்கனவே அஞ்சுவணத்தார் என்ற முஸ்லிம் வணிகக் கணம் செயற்பட்டு வந்திருந்தமையை காரணமாகக் காட்டுவதில் எந்தத் தர்க்க நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
பெரிதும் தென்னிந்தியப் பதிவுகளிலேயே குறிக்கப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தார், திடீரென்று இலங்கையில் வர்த்தக செல்வாக்கை பெற்றார்கள் என்று குறிப்பிடுவது தர்க்கப் பலவீனமிக்கதாக உள்ளது.
வரலாற்றுப் பதிவுகளில் மிகக் குறைவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வணிகப் பிரிவினர், எவ்வாறு மாபெரும் வணிகக் கணங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள் என்பது போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்கின்ற ஒரு விடயமல்ல. இத்தகைய பின்னணிகளைக் கவனத்தில் கொள்ளும்போது,  அஞ்சுவண்ணத்தார் என்பவர்கள், இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது சரியான ஊகமாகவே இருக்கின்றது.
எந்தவித அரசியல் செல்வாக்குகளும் அற்றவர்களாகவே குறிக்கப்படுகின்ற இந்த முஸ்லிம்கள் வர்த்தகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருப்பதற்கு, வேறு முக்கியமான காரணிகள் இருந்திருக்க வேண்டும். இந்த காரணிகள் பிரதானமாக அவர்களின் பூர்வீகத் தொன்மையுடன் தொடர்புபட்டதாக இருந்திருக்க வேண்டும். அதாவது, அஞ்சுவன்னத்தார் என்று அறியப்பட்ட மக்கள் பிரிவினர், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் மிகத் தொன்மையான காலந்தொட்டு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் இந்தப் பிராந்தியங்களில், பொருளாதார ரீதியான செயற்பாடுகளில் ஆளுமைமிக்கவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.
பண்டைய காலந்தொட்டு, தமிழர்கள் உட்பட சகல திராவிட சமூகங்களுக்கும் மத்தியில், அவர்களுக்குச் சமாந்தரமாக இவர்களும் தமது பொருளாதாரச் செயற்பாடுகளை திறமையாக முன்னெடுத்த பிரிவினர்களாக இருந்திருக்கின்றார்கள். இத்தகைய சூழலில், தமிழர்களின் இலங்கை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் பலவீனமடைந்த கட்டத்தில், ஏற்கனவே இத்தகைய வர்த்தகத்தில் தமது ஆளுமைகளைக் கொண்டிருந்த அஞ்சுவன்னத்தார் இயல்பாகவே மேலும் சிறந்த சாதக நிலையை பெற்றிருக்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் வணிகர்களின் செல்வாக்கு வலுவிழந்து, அங்கு அஞ்சுவன்னத்தாரின் செல்வாக்கு உயர்ந்தமைக்கு, அவர்கள் அன்றைய தமிழ் வணிகர்கள் கொண்டிருந்திராத வேறொரு சாதக நிலையைப் பெற்றிருந்திருக்கின்றார்கள். அதுதான் இலங்கையில் அவர்கள் கொண்டிருந்த பூர்வீகத் தொன்மையாக இருந்திருக்கின்றது.
தமிழர்களையும் விட பூர்விகத் தொன்மைமிக்க சமூகமாக அவர்கள் இருந்ததன் காரணமாகத்தான், அரசியல் அதிகாரம் அற்றவர்களாக இருந்தபோதிலும் தமது வர்த்தக ஆளுமையை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அவர்களுக்கு இயலுமாகியிருக்கின்றது. பூகோள ரீதியாக இலங்கையுடன் தொடுகையில் உள்ள தமிழநாட்டைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள், கி.பி. 14ம் நூற்றாண்டின் பின்னர், தமது வாணிப நடவடிக்கைகளை இலங்கையில் தொடர முடியாத அளவுக்கு இங்குள்ள சூழல் (குறிப்பாக அரசியல் நிலைமை) காணப்பட்டிருக்கின்றது என்பதை ஒரு எடுகோளாக் கொள்வோமாயின், கி.பி. 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து, இலங்கையில் உருவான அடக்குமுறைச் சூழலில் அஞ்சுவன்னத்தார் தமது வர்த்தகச் செயற்பாடுகளை முற்றாகவே கைவிட்டிருப்பார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.
ஏனெனில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் வர்த்தகச் செல்வாக்கின் விளைவாக, மிகக் கடுமையாக பாதிக்கப்பட் பிரிவினர்களாக மத்திய கிழக்கு முஸ்லிம்களே – குறிப்பாக அரேபியர்கள் – இருந்தார்கள். கி.பி. 16ம் நூற்றாண்டுவரை வெளிநாட்டு வாணிபத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த அரேபியர்கள், அதன்பின்னர் ஐரோப்பியர்களின் வர்த்தக எழுச்சியினூடாக, ஏறக்குறைய தமது வெளிநாட்டு வாணிபத்தை முற்றாகவே இழக்கின்ற நிலையை அடைந்தததைப் பார்க்கிறோம்.
ஆபிரிக்கா, ஆசியா, குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேறி, தமது மத்திய கிழக்கு எல்லைக்குள் உள்ளடங்குகின்ற நிலை உருவாகியது.
பேரா. சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்று அஞ்சுவன்னத்தார் என்பவர்கள் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்களாயின், ஐரோப்பியர்கள் இலங்கையை ஆக்கிரமித்ததன் பின்னர், அவர்களும் தமது நாடுகளுக்கு மீளச் சென்றிருப்பார்கள். அதன் பின்னர் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் இலங்கையில் முற்றாகவே கைவிடப்பட்டிருக்கும்.
ஆனால் நாம் இதற்கு முற்றிலும் மாறான நிலைமையையே இங்கு காண்கிறோம். ஐரோப்பியர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாங்கி, தாண்டி, இலங்கை முஸ்லிம்கள் தமது இருப்பையும் பொருளாதார நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகப் பேணி வந்திருக்கின்றார்கள்.
இந்த எதார்த்தமனது, அஞ்சுவன்னத்தார் என்பவர்கள் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும், அவர்கள் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் தமது பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்பதையும் எமக்குத் தெளிவாகச் சுட்டுகின்றன.
எவ்வாறு ஆபிரிக்க நாடுகளிலிருந்தும், தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் அரேபிய வர்த்தகர்கள் வெளியேறி பின்னரும் அங்கு அந்தந்த நாட்டு பூர்வீக மக்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அதேபோன்றுதான், இலங்கையிலிருந்தும் அரேபிய வர்த்தகர்கள் (அஞ்சுவன்னத்தார் அல்ல) வெளியேறிய பின்னரும் இங்குள்ள பூர்வீக மக்கள் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் காணப்பட்டு வந்திரருக்கின்ற அஞ்சுவன்னத்தாரின் தொடர்ச்சியான வர்த்தகச செல்வாக்கிற்கான தர்க்க நியாயம் இதுதான்.
இனி அஞ்சுவன்னம் (அல்லது அஞ்சுவன்னத்தார்) என்ற பெயரீடு எவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
பண்டைய காலங்களில் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரிவினர்கள் வெவ்வேறு தனித்துவமான பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள்.
மணிக்கிரமம், சாமந்த பண்டசாலி, தோயாவாத்திரச் செட்டி, தென்னிலங்கை வளஞ்செயர், ஐநூற்றுவர் (அஞ்ஞ¬ற்றுவர்), அறுநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர்… எனப் பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.,வர்களில் ஒரு பிரிவினராகத்தான் அஞ்சுவனத்தாரும் அறியப்படுகின்றார்கள்.
இந்த வணிக்கக் கணங்களின் பெயர்களிற்பல அடைமொழிகளாகத் தெரிவதோடு, இவற்றில் சிலவற்றில் எண்களைக் கொண்ட அடைமொழிகளும் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, ஐநூற்றுவர், அறுநூற்றுவர்….என. இத்தகைய எண்கள் ஏன் அடைமொழிகளாக இடப்பட்டன என்பது குறித்த ஆய்வு அவசியமாகின்றது.
அது இதுவரை யாராலும் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை. ஒருவேளை இந்த எண்கள், ஒரு வணிகக் குழுவிலுள்ள நபர்களின் எண்ணிக்கையாகவோ அல்லது அவர்கள் வாணிபம் செய்த இடங்களின் எண்ணிக்கையாகவோ அல்லது வேறு காரணத்தின்பாற்பட்டதாகவோ இருக்கலாம்.
இந்தவகையில் அஞ்சுவன்னம் (அஞ்சுவன்னத்தார்) என்பதையும் அடைமொழி சார்ந்த பெயரிடலாகக் கொள்ளலாம்.
பேரா. ம.மு.உவைஸ் அவர்கள் அஞ்சுவன்னத்தார் என்பதை அம் சுவன்னம் அத்து ஆர் எனப் பிரித்து, அழகிய சுவனத்துக்கு உரிமை உடையவர்கள் என அர்த்தம் கொள்ள முடியுமா எனக் பார்க்கிறார்.
உண்மையில், இதை இன்னொரு வகையாகவும் பிரிக்க முடியும். அதாவது, ஐந்நூற்றுவர் என்பதை ஐந்து நூற்றுவர் என்றும் அறுநூற்றுவர் என்பதை ஆறு நூற்றுவர் என்றும் பிரிப்பது போன்று அஞ்சுவன்னம் என்பதையும் ஐந்து சுவன்னம் (அஞ்சு சுவன்னம்) அல்லது ஐந்து சுவன்னத்தார் (அஞ்சு சுவன்னத்தார்) எனப் பிரிக்கலாம்.
இவ்வாறு பிரிக்கும்போது, ஐந்து (அல்லது அஞ்சு) என்பது எண்களினாலான அடைமொழியாகவும், சுவன்னம் (அல்லது சுவன்னத்தார்) என்பது இன்று சோனகர் என அழைக்கப்படுகின்ற மக்களைக் குறிப்பதாகவும் கொள்ள முடியும்.
பேரா. உவைஸ் அவர்களைப் பொறுத்தவரை சுவன்னம் என்பது விண்ணுலகத்திற்குரியதாக அடையாளம் காணப்படக் கூடியதாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் இது இங்கே பூமியில் உள்ள சுவன்னம் (சோனகம்) என்ற பிராந்தியத்தையும் அங்கு வாழ்ந்த சமூகத்தையும் குறிப்பதாக அர்த்தப்படுத்த முடியும்.
சோனக (சுவன) சமூகத்தைச் சேர்ந்த வணிகப் பிரிவினரே அஞ்சுவன்னத்தார் என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதால்தான், 14ம் நூற்றாண்டின் பின்னரும் அவர்கள் வாணிபத்தில் செல்வாக்குமிக்கவர்களாக திகழ்ந்து வந்திருப்பது சாத்தியமாகியிருக்கின்றது.
இலங்கையின் முதல் சமூகம் என்றவகையில் சுவனகர்கள், தமது பூர்வீக வாழிடங்களில் வரலாற்றுக் காலந்தொட்டு வெளிப்படுத்தி வந்திருக்கின்ற பல்வேறு ஆளுமைகளில் ஒன்றாகத்தான் அவர்களின் தொடர்ச்சியான வாணிபச் சிறப்பு நிலையும் அமைந்திருக்கின்றது.
தம்மிலிருந்து எத்தனை சமூகங்கள் பிரிந்து சென்றபோதும், பின்னர் தமது பிரதேசங்களை நாடியும் ஆக்கிரமிக்கவும் எத்தனையோ சமூகங்கள் வந்தபோதிலும், தமது இருப்பையும் தனத்துவத்தையும் அடையாளத்தையும் இவர்கள் உறுதியாக பேணிவந்திருக்கின்றார்கள் – இன்றுவரை.
ஐநூற்றுவர், அறுநூற்றுவர்… என அழைக்கப்படுகின்ற பிரிவினர்களின் மதநம்பிக்கை எவ்வகைப்பட்டது என்ற ஆய்வும் அவசியமாகின்றது.
அவர்கள் பௌத்த மற்றும் இந்துக் கோயில்களுக்கும் சமூகங்களுக்கும் உதவிகள் புரிந்திருக்கின்றார்கள் என்ற பதிவுகள் காணப்படுவதால் மட்டும் அவர்களைப் பௌத்தர்களாகவோ அல்லது இந்துக்களாகவோ அர்த்தப்படுத்த முடியாது. பொருளாதார ரீதியாக (அல்லது அரசியல் ரீதியாக…) செல்வாக்குப் பெற்றுள்ள பிரிவினர், பிற சமூகத்தினருக்கு உதவுவது என்பது இன்றுவரை நடைமுறையிலுள்ள முறைமையாகவே இருக்கின்றது.
இந்தவகையில், அன்று இலங்கையில் செயற்பட்ட வணிகக் கணங்களில் பெரும்பாலானவை சோனக சமூகத்தினருக்குரியவைகளாக இருந்திருக்க முடியும். அவற்றை தமிழ் அல்லது இந்து மதம் சார்ந்தவையாக வகைப்படுத்தும்போதுதான், கி.பி.14ம் நூற்றாண்டின் பின்னர் அவை மறைந்து விடுவதையும் அவற்றினிடத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் இருப்பதையும் குழப்பத்திற்குரிய நிகழ்வாகக் கருத முடியும்.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை சோனக வர்த்தகக் குழுக்களாகக் கொள்ளும்போது, அவர்களின் இருப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையும் அவர்களை அழைக்கப் பயன்படுத்திய பெயர்கள் மட்டுமே மாறியிருப்பதையும் காண முடியும். அன்றைய வணிகக் கணங்களை அழைக்கப் பயன்படுத்திய ஒரு முக்கிய சொல்லான மடிகை (மடிகே) என்பது, இலங்கையில் எந்தத் தமிழருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் அது முஸ்லிம்களுக்கே பெருமளவில் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
இறைவனால் முதலில் படைக்கப்பட்ட மனிதரான ஆதம் (அலை) அவர்கள் ஆரம்பத்தில் சுவன்னத்தில் வாழ்ந்ததன் நினைவாக சேர்க்கப்பட்ட அடைமொழியாக சுவன்னன் (சுவனன்) என்ற பதம் அமைந்திருக்கின்றது என்றும், அதுவே தமிழர்களால் சிவன் என்றும், பௌத்தர்களால் சமன் என்றும் திரிந்திருக்கின்றது என்றும் இவற்றின் காரணமாகத்தான் ஆதம் மலை என்பது, சிவனொளிபாத மலை என்றும் சமனலகந்த என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது என்றும் “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்” என்ற எனது நூலில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இதை மேலும் ஆதாரப்படுத்தும் விதமாக அஞ்சுவன்னம் (அஞ்சுவண்ணம்) என்ற பெயரும் அமைந்திருக்கின்றது, அஞ்சுவண்ணம் என்பதற்கு அகராதி அர்த்தங்களில் ஒன்றாக சிவனின் நாமங்கள் என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சிவனுக்குரிய பல பெயர்களில், சோணகேசன், சோணாச்சலம், சோணகிரி என்பனவும் உள்ளடங்குகின்றன.
இந்த பெயர்கள் அனைத்துமே அடிப்படையில் சோனகன் என்பதை வேர்ச் சொல்லாக கொண்டிருப்பது ஒரு தற்செயல் இணைவா? அல்லது சுவனன் – ஆதம் (அலை) – அவர்கள்தான் சிவனாகக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை ருசுப்படுத்தும் சான்றுகளா?
-அ.வா.முஹ்சீன்
-www.sonkar.com-

No comments:

Post a Comment

المشاركات الشائعة