Search This Blog

Jun 30, 2011

வாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு?

றிசாத் இப்னு ஆதம்
காத்தான்குடி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற குறைந்த நிலப்பரப்பில் அதிக சனத்தொகையை கொண்ட ஒரு சிறிய அழகிய நகரம். இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருப்பதாலும், இங்கு காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் மார்க்க ரீதியிலான தலைமைத்துவ வழிகாட்டலின் விளைவாலும் இந்த நகரம் ஏனைய நகரங்களை விடவும் ஒரு தனித்துவ நகராக மிளிர்ந்து காணப்படுகின்றது.
வர்த்தக ரீதியில் கிழக்கிலங்கையின் முக்கிய நகராகவும், தலை சிறந்த வர்த்தகர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும் தன்னகத்தே கொண்டு அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது விரிவாக
அதே வேளையில் நமது நாட்டில் அவ்வப்போது ஏற்படுகின்ற பல்வேறுபட்ட அனர்த்த சூழ்நிலைகளில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நின்று பொருளாதார ரீதியிலும் மற்றும் இன்னோரன்ன வழிகளிலும் பாரிய உதவிகளை செய்து வருகின்ற கட்டமைப்பை கொண்ட ஒரு நகரம் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் காத்தான்குடி தொடர்பாகவும் அண்மைக்காலத்தில் அங்கு இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்களும், குறிப்பாக ஒரு சில குறுகிய மனப்பான்மையுடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாலர்களும் சர்வேதேசரீதியில் காத்தான்குடிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை திரிபுபடுத்த முனைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இதற்காக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களை இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றார்கள்.
கடந்த 20 ம் திகதி காத்தான்குடியில் இரண்டு பள்ளிமாணவிகள் குறிப்பிட்ட சில இளைஞர்களால் கலாச்சாரத்தை மீறியது தொடர்பில் விசாரிக்கப்பட்ட சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக BBC தமிழ் சேவையானது இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதுடன் சம்பவத்துடன் சம்பந்தமில்லாத ஒரு சில விடயங்களை இணைத்து செய்தியை திசைதிருப்ப எத்தனித்திருந்தது.
இந்த செய்தி குறிப்புகளை தொகுத்து வழங்கியிருந்த ஊடகவியலாளர் N.உதயகுமார், வெறுமனே ஒரு சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளின் விளைவாக இடம்பெற்ற கலாச்சார பின்னணி பொருந்திய இந்நிகழ்வை ஒரு பெரிய சம்பவமாக காட்டியதோடு மாத்திரமல்லாமல் இது ஒரு மத அடிப்படைவாதம் எனும் போக்கில் செய்தியை தனது விருப்பத்திற்கேற்ப திரிபுபடுத்த முனைந்துள்ளார். இவர் தனது கருத்திற்கு வலு சேர்ப்பதற்கு இந்த செய்திக்கு தொடர்பில்லாத வேறுபல செய்திகளை இணைத்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே கௌரவ பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணியும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஷீர் அவர்களும், இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையே என்று BBC தமிழோசைக்கு மிகவும் தெளிவாக செவ்வி வழங்கி இருந்தனர்.
இருந்த போதும் ஊடகவியலாளர் உதயகுமார், மத அடிப்படைவாதம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் விதைக்க முனைவதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
ஒரு சமூகம் என்பது பல தனிமனிதர்களின் கூட்டு. அதில் பல்வேறுபட்ட வித்தியாசமான குணாதிசயங்களைகொண்ட மனிதர்கள் காணப்படுவார்கள். ஒரு சிலரின் நடத்தையால் மொத்த சமூகமும் வேருபாதை நோக்கி நகர்வதாக கூறமுடியாது. அந்த வகையில், இந்த சம்பவத்தில் சம்பத்தப்படும் ஒற்றை இலக்கத்தில் உள்ள சில இளைஞர்களின் தனிப்பட்ட ஆத்திர உணர்வுகளை 60,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் காத்தான்குடியின் மொத்த மக்களின் உணர்வாக கருத முடியாது.
ஆனால் உதயகுமார், சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கையை மத அடிப்படைவாத சந்தேகத்தை ஏற்படுத்தி மொத்த காத்தான்குடியே மத அடிப்படைவாதத்தோடு இணைக்க முற்படுகின்றார். அனாமேதயமாக சில மட்டங்களில் அடிப்படைவாதம் தலைதூக்குகிறதா என்ற அச்சம் நிலவுகிறது என்று செய்தி புனையப்பட்டுள்ளது.
காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்ட வகையில் சர்வதேசரீதியில் சேறுபூசும் இந்த நடவடிக்கையானது, இவர் காத்தான்குடி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டுள்ளாரா அல்லது வேறு யாரினதும் விருப்பத்தின்பால் செயற்படுகின்றாரா என்று என்ன தோன்றுகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சர்வதேச வலையமைப்பான BBC தமிழோசையினை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
கடந்த 28 ம் திகதி இவர் BBC தமிழ் சேவையில் காத்தான்குடி தொடர்பாக தொகுத்து வழங்கிய குறிப்பில் தான் சொல்ல வந்த விடயத்திற்கு எந்தவித சம்பந்தமும் அற்ற வகையில் காத்தான்குடியில் இருக்கின்ற ஏற்கனவே பல தடவைகளில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்ட அரபு மொழியிலான பெயர்ப்பலகை விடயத்தை சுட்டிக்காட்டி இருந்தமையானது இவர் காத்தான்குடி மேல் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட குரோதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காத்தான்குடி மக்களால் பார்க்கப்படுகின்றது.
மாத்திரமின்றி, பள்ளிமாணவிகள் விசாரிக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியின் தாய் நிறுவனமும், அனைத்து காத்தான்குடி மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவத்தை வழங்குகின்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இந்த செய்தி தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை விளக்கும் உத்தியோகபூர்வ செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், உதயகுமார் உட்பட எந்தத் தமிழ் ஊடகவியலாளரும் அங்கு வருகை தராமல் அதை புறக்கணித்திருந்தமையும் இவர்களது அநாகரீக ஊடக செயற்பாட்டுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
இது தவிர இவர் கடந்த காலங்களிலும் தனது செய்திகளின் ஊடாக காத்தான்குடி நகர் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதாக திரிவுபடுத்த முனைந்துள்ளர். இதற்காக BBC தமிழ் சேவையினை பயன்படுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக காத்தான்குடி பிரதான வீதியில் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லாவின் அபிவிருத்தி வழிகாட்டலில் பேரீச்சம் மரங்கள் நடப்பட்டது தொடர்பிலும், அரபு மொழியை தங்களது புனித மொழியாக நேசித்து அதனை 95% க்கு அதிகமான மக்களும் அறிந்து இருக்கின்ற காத்தான்குடி நகரில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவன அனுசரணையில் அரபு மொழி மற்றும் ஏனைய தேசிய மொழிகளிலான வீதி பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டது தொடர்பிலும் இவர் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் மத அடிப்படைவாதத்தை இணைக்க முனைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அபிவிருத்திகள் வெறுமனே கலாச்சாரம், அழகியல் மற்றும் தேவைப்பாடுகள் சார்ந்த அபிவிருத்திகளே அன்றி இதற்கு பின்னால் எந்த வித பின்னணியும் கிடையாது.
ஆயினும் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் சர்வதேரீதியில் காத்தான்குடிக்கு சேறுபூசும் இவரின் இந்த அணுகுமுறை சொந்த குரோத்தத்தின் வெளிப்பாடா என்று என்ன தோன்றுவதோடு, பல்வேறு பட்ட காத்தான்குடி சமூக, சிவில் அமைப்புகளினதும், பொதுமக்களினதும் கண்டனத்திற்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகி இருக்கின்றது.
இது தொடர்பிலான உண்மையை தான் அறிந்து இருந்தும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே காத்தான்குடி மீதான இவரது சொந்த எதிர்ப்பை திரிவு படுத்தப்பட்ட செய்திக்குறிப்புகளினூடாக உலகச் சேவையான BBC ஐ பாவித்து வெளியிட்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அத்தோடு மாத்திரமல்லாமல், கடந்த காலங்களில் மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட இன முரண்பாடுகளுக்கும் இவரது ஒரு சில திரிபு படுத்தப்பட்ட செய்திகள் காரணமாக இருந்தமை தொடர்பில் இவர் பல கண்டனங்களை எதிர்நோக்கி இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தனது காழ்ப்புணர்வை வெளியிட்டு வருகின்ற உதயகுமாரின் குரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, இவ்வாறான இவரது நடவடிக்கைகளுக்கு BBC சேவையானது இடம் கொடுக்கக்கூடாது என்பதும் இவ்வாறானவர்களின் நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருந்து அனைத்து இனங்களின் சுய கலாச்சார மத மற்றும் பண்பாட்டு ரீதியான விடயங்களை செய்வதற்கு சுதந்திரம் உள்ள ஒரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு பல்லோரும் பாடு பட வேண்டும்.
தகவல் :
www.kattankudi.info

சியோனிச தாளத்துக்கு ஆட்டம் போடும் பிரிட்டன்



ஷேய்க் ரியத் சலாஹ் -Sheikh Raed Salah- என்ற ’1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் இஸ்லாமிய இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவரை பிரிட்டன் கைது செய்துள்ளது. இந்த கைதையும் நுழைவு மறுப்பையும்  சியோனிச சக்திகளில் தாளத்துக்கு பிரிட்டன் ஆட்டம் போடுகின்றது என்று இஸ்ரேலிய அரபு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மக்களின் தோழமை அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் ‘ஜெருசலத்தில் சமாதானத்தையும் நீதியையும் கட்டி எழுப்புதல்’ -”Building Peace and Justice in Jerusalem”- என்ற தலைப்பில் உரையாற்ற விருந்த ஷேய்க் ரியத் சலாஹ் பிரிட்டன் விசா பெற்று அங்கு சென்றவேளை பிரிட்டன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் நாட்டுக்குள் நுழைய விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேலுக்கு கடத்தப்படவும் உள்ளார் பிரிட்னின் இந்த செயலை பல பொது அமைப்புகள் கண்டித்துள்ளது விரிவாக
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பலஸ்தீன் தேசம் தற்போது இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடாகவுள்ளது என்ற முழக்கத்தை இஸ்ரேலுக்குள் இருந்து முழங்கி பலஸ்தீன விடுதலைக்காக சாத்வீக முறையில் போரடிவருபவர். இவரை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு பல தடவைகள் பல குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறைபடுதியுள்ளது இஸ்ரேலுக்குள் இருந்தே இஸ்ரேலுக்கு எதிராக போராடுபவர் இவரின் அமைப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு கைதுசெய்து சிறையில் தள்ளும் போது பல மாதங்கள் பல ஆண்டுகள் என்று வதை முகாம்களில் இருந்த பின்னர் இவர் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எமது போராட்டம் ஓயாது இஸ்ரேலின் எந்த விதமான அடக்குமுறைக்கும் அடிபணியோம் பயமின்றி எமது போராட்டம் தொடரும் எமது போராட்டத்தின் முடிவில் பாலஸ்தீன் விடுதலை பெரும் அல் அக்சா மீட்கப்படும் என்றும் தெரிவிப்பார். இவ்வாறான மிகவும் பலமான மனஉறுதி மிக்க ஒரு சாத்வீக போராளி இவர் என்று பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றது.
-Our Ummah-

Jun 28, 2011

லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?


 கடந்த மார்ச் மாதம் 25 திகதி -25.3.2011 – அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் அவர்களினால் எழுதி OurUmmah.org யில் பதிவு செய்யப்பட்ட ‘லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?’ என்ற கட்டுரை இன்று 27.6.2011 அன்று எமது தளத்தில் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
M.ஷாமில் முஹம்மட்
நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜேர்மன், பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது.
என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆனாலும் இன்னும் நேட்டோ பொறுப்பு ஏற்கவில்லை இன்று அல்லது நாளை பொறுப்பு ஏற்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது
நேட்டோ பொது செயலாளரின் அறிவிப்பில் இரண்டு நடவடிக்கைகள் பற்றி குறிபிடப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைமைகள் பற்றியும் தெரிவிக்கப்ட்டுள்ளது ஒன்று ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ கையில் எடுக்க , மற்ற நடவடிக்கைகளான ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’   விரிவாக என்ற ஐநா அனுமதியின் கீழ் லிபியா படைகள் மீது வழிந்த தாக்குதல் , தரைப்படை லிபியாவினுள் உள்நுழைந்து தாக்குதல் என்ற பரந்த பொருள் கொண்ட’ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’ என்ற ஐநா அனுமதியை மேற்கு கூட்டு படைகள் மேற்கொள்ளும் என்று விளங்கிக்கொள்ளபடுகின்றது
நேட்டோ உறுப்புநாடான துருக்கி இந்த நேட்டோ நடவடிக்கையாக தரை படையை நேட்டோ அனுப்ப கூடாது என்ற நிபந்தனை உள்ளடங்களாக சில இறுக்கமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது அதற்கு சாதகமான நிலைபாட்டை ஜெர்மணியும் எடுத்துள்ளது என்பதால் இரட்டை தலைமை என்ற முடிவுக்கு மேற்கு கூட்டு தலைமை வந்திருக்கலாம். இங்கு மேற்கு நாடுகளுக்கு ஐநாவின் அனுமதி என்பது உலகை ஏமாற்ற இன்று தேவைப்படுவதாக தெரிகின்றது ஆனால் ஈராக்கை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் , ஆப்கானை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் மேற்கு கூட்டு பயங்கரவாதத்திற்கு இந்த ஐநா அனுமதி அன்று தேவைப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
கடந்த ஆறு இரவுகளாக மேற்கு நாட்டு கூட்டு படைகள் அமெரிக்காவின் வழிகாட்டலில் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது இந்த இராணுவ நடவடிக்கைக்கு 350 யுத்த விமானங்களும் , 38 யுத்த கப்பல்களும் பயன்படுத்த படுகின்றது யுத்த விமானங்களில் அரைவாசி விமானங்களும் 12 யுத்த கப்பல்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது இது வரை ஏவப்பட்ட 170 வரையான ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு சொந்தமானது தற்போது வரைக்கும் மேற்கொள்ள படும் நடவடிகைகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கின்றது எனினும் அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தான் பிரதான வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நடவடிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவதாகவும் தெரிவித்துள்ளது இந்த நிலையில் தரை படை லிபியாவுக்குள் யாரின் தலைமையில் நுழைவது என்று விவாதங்கள் நடைபெற்று வருகின்றது
லிபியாவின் பல இராணுவ இலக்குகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் கடாபிக்கு அனுதாப பிரிவு ஒன்றை உருவாக்கும் என்றும் மேற்கு , கிழக்கு என்ற சிவில் யுத்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் லிபியா என்ற நாடு இரண்டாக பிரிய வழிவகுக்கும் என்று எண்ணுவது தவறாகாது இந்த நிலையில் மேற்கு கூட்டு படைகள் உள்நுழைந்து தாக்குமா? அல்லது கடாபியையும் மட்டுபடுத்தப்பட்ட அதிகாரத்துடன் வைத்துகொண்டு லிபியாவை இரண்டாக பிரித்து வைத்து எண்ணெய் வளமிக்க கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகத்தை முழுமையாக மேற்கு மீது சார்திருக்க செய்யவதன் ஊடாக ஈராக் , ஆப்கான் போன்ற ஒரு நிலையை ஆபிரிக்காவிலும் தோன்ற செய்யுமா என்பது விரைவில் தெரியவரும்
கிழக்கு லிபியாவில் உருவாக்க பட்டு வரும் நிர்வாகம் முழுமையாக மேற்கின் தயாரிப்பாகும் அதன் போராளிகள் சிறு கோத்திரங்களாகவும் தனிநபர்களாகவும் மேற்கு உருவாக்கியுள்ள தலைமையின் கீழ் தற்போது ஒன்று பட்டுள்ளனர் இந்த போராளிகள் , இந்தமக்கள் பக்குவம், அனுபவும், தூர நோக்கு கொண்ட சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களால் எந்த வகையிலும் பயிற்றப்படாதவர்கள் அங்கு குறிப்பிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவர்களின் செல்வாக்கு பாரிய மக்கள் சமூகத்தை ஒரு திசை நோக்கி வழிகாட்ட போதுமானதாக இல்லை என்றுதான் அறிய முடிகின்றது ஆகவே போராட்டம், ஜிஹாத் என்று திரண்டு நிற்கும் அந்த மக்கள் போராளிகள் மேற்கின் தயாரிப்பான தலைவர்களின் கீழ்தான் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களை யாரும் இலகுவில் ஏமாற்ற முடியும் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றை பயன்படுத்திக் கூட இவர்களை விரும்பிய வடிவத்துக்கு வார்த்துகொள்ள முடியும் என்பது மேற்கின் சூழ்ச்சி முறையிலான நடவடிக்கைகளுக்கு களம் இலகுவாக இருப்பதை காட்டுகின்றது. இந்த மாதிரியான இரகசிய நடவடிக்கைகளை ஆப்கானிலும் , பாகிஸ்தானிலும் மேற்கு உலகம் வெற்றிகரமாக செய்துவருகின்றது என்பது நோக்கத்தக்கது
மறுபுறம் கடாபி சிலுவை யுத்தம் லிபியா மீது தொடுக்கப்பட்டுள்ளது சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது இளம் சமுகமே திரண்டு வா தொழுது முடித்து விட்டாயா ? எடுகையில் ஆயுதத்தை கிறிஸ்தவ சிலுவை யுத்தம் உன் நாட்டின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கூவி போர் பறை கொட்டுகின்றார் மறுபக்கம் கடாபி தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இராணுவம் கடாபிக்கு கட்டுப்படுவதை உடடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தாக்குதல் நடத்தப் படுகின்றது இந்த தாக்குதல் எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ?, தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடாபியை பலவீனப் படுத்துகின்றதா? என்ற விடை தெரியாத கேள்விகள் எமக்கு இருந்தாலும் மேற்கு கூட்டு படைகளுக்கு அதற்கான தெளிவான விடை இருக்கிறது.
விடையாக முடிவாக மேற்கு கூட்டு தரை படை உள்நுழைந்து தாக்குதல் நடத்தலாம் லிபியாவை ஆக்கிரமிக்கலாம் ஒரு பொம்மை நிர்வாகத்தை ஏற்படுத்தலாம் ஒரு ஈராக்காக ஒரு ஆப்கானாக லிபியாவையும் வைத்துகொள்ளலாம், இறுதியில் இழப்பு முஸ்லிம் உம்மாவுக்கு தான் என்ற கணக்குதான் இங்கும் போடப்படுமா ? என்ற கேள்விகள் இன்னும் கேள்விகளாக மட்டும் இருக்கபோவதில்லை.
2004ஆம் ஆண்டு அமெரிக்க ஜோர்ச் புஷ் நிர்வாகம் லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தது இதை தொடர்ந்து கடாபி அணுவாயுத உற்பத்திக்கான முயற்சிகளை கைவிடுவதாகவும் War on Terror நடவடிக்கையில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைப்தாகவும் அறிவித்தார் அதுவரையும் அமெரிக்காவுக்கு கம்யூனிஸ ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினாக தெரிந்த கடாபி அதன் பின்னர் கடாபி மேற்கு நாடுகளுக்கு மைக்கல் கோர்பசேவ்வாக தெரிய தொடங்கினார்.
அத்துடன் கடாபி ஒரு சோஷலிச இடதுசாரி சிந்தை கொண்டவர் எப்போதும் மேற் கு உலகிற்கு எதிரானவர் என்ற தோற்றம் அடிபட்டு போய்விட்டது அதன் பின்னர் மேற்கு உலகம் கடாபியுடன் அனைத்திலும் கைகோர்த்தது முதலாளித்துவ சக்திகளுக்கும் சோஷலிச சக்திகளுக்கும் இடையான போர் லிபியாவில் 2004 ஆம் ஆண்டுடன் முற்று பெற்று விட்டது.
அதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தக கம்பனிகள் லிபியா மீது படையெடுத்தன ஆனால் இதற்கு முன்னரும் லிபியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடாக இத்தாலி பார்க்கபடுகின்றது இத்தாலியின் எண்ணெய் நிறுவனங்கள் 50 வருடங்களுக்கு மேலாக லிபியாவில் இயங்கிவருவதாக தெரிவிக்கபடுகின்றது இத்தாலியின் பொருளாதார வெற்றிக்கு பின்னால் லிபியாவுடனான உறவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலி லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் 38 வீதத்தை ஒபந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றது, லிபியா ஒரு நாளைக்கு 1.45 மில்லியன் பெறல் எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றது அவற்றை மேற்கு உலகம் தடை இன்றி அனுபவித்து வருகின்றது என்பதும் வெளிப்படையான உண்மை.
இந்த வளங்களை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாம் பெற்றுக்கொள்ள முயல்வதாக இத்தாலி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் எனினும் மேற்கு மேலாதிக்கம் லிபியாவில் வளங்களை கொள்ளையடித்து தமக்குள் பங்கீடு செய்வது என்பதை விடவும் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி அலைகளை முறியடிக்கவும் ஆப்கான் , பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டை சோமாலியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் உருவாக்கும் தமது நீண்டகால அடிப்படையான திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது துனுசியாவிலும், எகிப்திலும் வெற்றிபெற்றுள்ள மக்கள் ஆர்பாட்டங்கள் மேற்கை அதிர்வடைய செய்துள்ளது அந்த அமைதியான ஆட்சி மாற்றங்கள் மேற்கின் நலன்களுக்கு எதிர்காலத்தில் முற்றுபுள்ளி வைக்கும் என்று மேற்கின் கணக்கு சரியாக இருந்தால் லிபியா கண்டிப்பாக ஆப்கானாக மாறவேண்டும் என்பது அவர்களுக்கு தவிர்கமுடியாத முடிவு.
லிபியாவின் வளங்களை மேற்கு நாடுகள் மட்டுமல்ல சீனாவும், ரஷியாவும் கூட பெற்றுவருகின்றது சீனாவும், ரஷியாவும் பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களை செய்துள்ளது சீனாவும் லிபியாவின் எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது, ரஷியா 4 பில்லியன் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது சீனா லிபியாவின் எண்ணெயில் 5 வீதம் தொடக்கம் 7 வீதமான எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது இது அமெரிக்கா லிபியாவில் இருந்து பெற்று கொள்ளும் எண்ணெக்கு நிகரானது ஆகவே தாக்குதல் படையெடுப்பு ஆகியவற்றின் நோக்கம் வெறும் வளங்கள் மீதான வேட்டையல்ல அதற்கும் மேலாக எதிர்காலத்தில் இஸ்லாம் பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர்ந்து வருவதை தடுக்கும் இரகசிய நோக்கம் கொண்டது இது ஆழமான தெளிவான இலக்கு மற்றும் திட்ட அடிப்படைகளை கொண்டது என்றுதான் விளங்கிக்கொள்ள முடிகின்றது .
லிபியாவின் வளங்கள் சவூதியை விடவும் மலிவாக கிடைக்கும்போது அதை ஆக்கிரமிப்பது பெற்றுகொள்ளவேண்டிய தேவைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது காலம் எமக்கு இவற்றை தெளிவு படுத்தும்- லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ? காலம் பதில் சொல்லும்.

ஹிங்குராணை விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமா ?


ஹிங்குராணை சீனித் தொழிச்சாலை தொடர்பான விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளை ஒரு மதத்திற்குள் தீர்வு காணுமாறு அமைச்சர் தயாசிற திஸ்சேரா மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் ஹிங்குராணை சீனித் தொழிச்சாலைக்கும் அந்த பிரதேச விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான காணி பிரச்சினை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் காணி விடயத்தில் இராணுவம் போலீஸ் பிரிவுகள் தலையிடும் சம்பங்களும் இடம்பெற்றுள்ளது என்று சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர் அங்கு உரையாற்றியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைத்தீவு, வாங்காமம், ஆலம்குலம், குடுவில் காட்டுவெளி , பொத்தன் வெளி ஆகிய பிரதேச விவசாயிகள் வீணாக நீண்ட காலமாக அலைகழிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
சீனித் தொழிச்சாலை முன்பு முடப்பட்டதன் பின்னர் சீனிக் கூட்டுத்தாபனத்தால் பயன்படுத்தப்படாத விவயாயிகளின் காணிகளை அவற்றின் சொந்த காரர்களுக்கு மீண்டும் கையளிக்கவும் பாதிகபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு நீண்டகாலமாக அம்பாறை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ள படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நீதிமன்றம் சென்று தங்களது காணிக்கை பெற்றுகொள்ள சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பவர்களும் வேண்டுமென்றே உயர் அதிகாரிகளினால் அலைகழிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார் இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தயாசிற திஸ்சேரா ஹிங்குராணை சீனித் தொழிச்சாலை சம்பந்தபட்ட சகல காணிப் பிரச்சினைகளையும் இனம் கண்டு உரிய நிவாரணத்தை விவசாகிகளுக்கு வழங்கும் நோக்குடன் ஒரு குழுவினரை அமைத்து செல்படுமாறு அம்பாறை அரச அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் இதுவரை நிறைவேற்றபடாமை தொடர்பில் உடனடியாக தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சின் செயலாளரை பணிதுள்ளதுடன் குறித்த குழுவினரை உடனடியாக அமைத்து ஒரு மாத காலத்துக்குள் தீர்வு காணுமாறும் மீண்டும் பணித்துள்ளார்
இந்த நீண்டகால காணி பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி இது தொடர்பாக முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அதிகாரிகள் தமிழ் மொழிக் தெரியாதவர்களாக இருப்பதால் இந்த நிலைமை நீண்டகாலமாக தொடர்கின்றது மேலும் காணி பிரச்சினைகள் பல வற்றை இழுத்தடிக்க இது போன்ற குறைபாட்டை சில அதிகாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொள்கின்றனர் , இராணுவம் மற்றும் போலீஸ் பிரிவுகளும் கூட காணிப்பிரச்சினை அடிக்கடி தலையிட்டு அச்சுறுத்துவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ள. அண்மையில் இறக்காமம் பிரதேசத்தில் வேளாண்மை பயிர் செய்யப்பட்ட வயல் நிலத்துக்குள் போலீஸ் பிரிவை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் உழவு இயந்திரங்களை கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி அட்டகாசங்கள் செய்தமையை அம்பாறை அரச அதிபரிடம் முறையிட்டுத் தடை செய்யவேண்டி இருந்ததாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்
முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளை ஜனாதிபதி மட்டத்துக்கு எடுத்துரைக்க ஏதுவாக புதிய கேள்வி கொத்தை தயாரித்து தகவல்களை திரட்டும் முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேச்சில் முஸ்லிம் தரப்பு கலந்துகொள்ள வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது: பிரதமர்


அரசாங்கத்திற்கும் தமிழ் கூட்டமைப்புகளுக்கும் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களினது கோரிக்கை நியாயமானதாகும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஐந்து வகையிலான இனத்தவர்கள் வாழ்கின்றனர். இந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் ஏனைய இனங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நேற்று -27.6.2011- கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியைப்  பெற்ற பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் மேலும் அங்கு குறிப்பிடுகையில், தற்போது அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்ட பணிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தீர்வுத் திட்ட விடயங்கள் தனி நபருக்கோ அல்லது தனிப்பட்ட கட்சி சார்பாகவோ இல்லாமல் எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் வழிவகுக் காத வகையிலும் மற்றும் ஏனைய இனத்தவர்களின் கெளரவத்தை உறுதிப் படுத்தும் வகையிலும் இந்த அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. எதிர்க் கட்சியினர் இன்று நாட்டுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சர்வதேச தரங்கள் வெளிக்கொணரும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன. அன்று வடக்கில் தமிழ் அமைப்புகளினால் முன்னெடுத்துச் சென்ற கூட்டங்களை குழப்பி அதில் பல்வேறு பிரச்சினைகளையும் பிளவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதுபோன்று நாட்டை அபகீர்த்திக்குட்படுத்தி வெளிநாட்டு செல்வாக்கை பெறுவதிலும் அவர்கள் முயற்சிபண்ணி வருகின்றனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.-எம். ஏ. அமீனுல்லா-தினகரன்

யாழ் ஒஸ்மானியாவின் வரலாறு திரிந்து போகும் நிலை மாறுமா?


முஹம்மது ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒரு கீதம் வேண்டுமென்ற அவசியம் ஏற்பட அப்போது அங்கு கடமையாற்றிய தமிழ்ப்புலமைமிக்க ஆசிரியர் அமரர் அசாரியஸ் பொர்ணான்டோ அவர்கள் உடனடியாக ஒரு பாடசாலைக் கீதத்தை இயற்றிக் கொடுத்தார்கள்.
வளர்கலை மாமதி யோடிளந் தாரகை வானக மேலொளி மல்க ,வல்லோனின் மார்க்கமதை யோது நம் சாலை வளமே வாசிகள் நல்க, வந்தனை மொழிமெய் சிந்தனை மூன்றும் வன்மை பெறஞ்சலி செய்வோம். வகைபல கடமை கண்யம் வாகை புனை கட்டுப்பாட்டில் வாழின்ப யாழ் ஒஸ்மான்யா!
என்று தொடரும் இந்த கீதத்துக்கான மெட்டையும் பொர் ணான்டோ ஆசிரியர் அவர்களே பாடிக் காண்பித்துக் கொடுத்தார். 1964களில் அதிபராக இருந்த மர்ஹூம் எம.எம். யூசுப் அவர்கள் கீதத்தின் சில பதங்களை இஸ்லாமிய வடிவமாக்கினார். ஆனால் கீதத்தின் மெட்டு மாறவில்லை. அன்று முதல் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை அதே மெட்டில் அந்த கீதம் பாடப்பட்டு வந்தது.ஆனால் 2002இல் மீளக்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் சிலர் பாடசாலையை சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் ஆரம்பித்தனர். அதே கல்லூரி கீதமே பாடப்பட்டது. ஆனால் அதன் மெட்டுக்கள் மாற்றப்பட்டு கருத்து மாறும் விதமாக இன்று பாடப்பட்டு வருவதாக முன்னாள் பாடசாலை ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
ஆரம்ப காலத்தில் மூன்று விளையாட்டு இல்லங்கள் இருந்தன. அலி (பச்சை நிறம்) ஷாபி (நீல நிறம்) இக்பால் ( சிவப்பு நிறம்) போன்ற இல்லங்களை மையமாக வைத்து பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும். எதிர்காலத்தில் மாணவர் தொகை அதிகரிக்கும் எனவே விளையாட்டு இல்லங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டி வரும் என்று கருதிய யூசுப் அதிபர் அவர்கள் பாடசாலைக் கீதத்தில் ஜின்னா மற்றும் கஸ்ஸாலி(மஞ்சல் நிறம் ) ஆகிய இல்லங்களின் பெயர்களையும் இனைத்தார். அந்த வரிகள் பின்வருமாறு:
மகிபன் அலி கலீபா ஷாபி இமாம் நிறை மாதத்வ ஞானி கஸ்ஸாலி
வான்கவி இக்பால் சத்தியவாத மேதை சுதந்திர ஜின்னா
மன்னீய நாம வழியில் மகிழைந்து அணிகளானோம்
என்ற வரிகள் அன்று சேர்த்தெழுதப்பட்டன.
அவர் முன்கூறியது போலவே 1975களில் கஸ்ஸாலி இல்லமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இடையில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததால் கஸ்ஸாலி இல்லம் கைவிடப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற பாடசாலை விளையாட்டுப் போட்டியில் இல்லங்களின் நிறங்கள் கூட மாற்றம் பெற்று மஞ்சல் செம்மஞ்சல் போன்ற நிறங்கள் உள்வாங்கப்பட்டு பாடசாலையின் வரலாறு திரிபு படுத்தப்பட்டிருப்பதாக முன்னாள் மாணவர்கள் சிலர் கவலைப்பட்டனர். பாடசாலை பழைய மாணவர் சங்கமும் இது விடயத்தில் அசிரத்தையாக இருப்பதாக அதில் அங்கம் வகிக்காத பழைய மாணவர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
அதிபராக தற்போது கடமையாற்றி வருபவர் மௌலவி ஆசிரியர் என்பதால் அவருக்கு பாடசாலையின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. பாடசாலை கீதத்தின் மெட்டையும் விளையாட்டு இல்லங்களின் நிறங்களையும் மாற்றி வரலாற்று ரீதியான முறைமைக்கு பாதகம் ஏற்படுத்தாது அவற்றை மீளக்கொண்டுவருமாறு சிலர் வேண்டிக்கொண்டதன் பிரகாரம் இச்செய்தி எழுதப்பட்டது. ஆசிரியர்களும் பழைய மாணவர் சங்கமும் யதார்த்தத்தை விளங்கி வரலாற்று முறைகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்!

முஸ்லிம்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?





  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன? 
இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...

இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...
  • இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?
  • ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் 
     பாடசாலைகளில் 
     
    நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?
குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.

இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர். பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக  இந்த இடங்களுக்கு தான் வருவார்கள்.அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன...
இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை  தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய்  விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.
                                  
அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
முஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக  பக்கங்கள் தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.

இதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.       

இந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

கணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான சில பங்களிப்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்

கணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை
  1. எண் கணிதம் (Arithmetic)
  2. அட்சர கணிதம் (Algebra)
  3. கேத்திர கணிதம் (Geometry)
  4. கோணவியல் (Trignometry)
இந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.       

1. எண் கணிதம் (Arithmetic):




எண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like 11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல் (Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.    

எண்கள்:

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் "0,1,2,3,4,5,6,7,8,9", இந்த எண்களுக்கு பெயர் "அரேபிய எண்கள் (Arabic Numerals)" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.


நீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும் எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.

இந்த "சைபர் (Cipher/Cypher, '0') " என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க "சிபர் (Sifr)" என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம் '0' வை குறிக்க பயன்படுத்தும் சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான்.

அரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள் என்று பெயர் சூட்டிவிட்டனர்.  

அதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals)என்று அழைக்கப்படுகின்றன.

எண்ணும் முறை:

மேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.  

அரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்
  • கிரேக்கர்கள்
  • எகிப்தியர்கள் 
  • ரோமானியர்கள் மற்றும்
  • ஹிந்துக்கள் 


இவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது. முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும் புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.

1-I, 2-II, 3-III, 4-IV, 5-V, 6-VI ...... 10-X, 11-XI, 12-XII....

இந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும் கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323 என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100, X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான். 

மற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும் குழப்பம்தான். உதாரணத்துக்கு 302  என்று எழுதவேண்டுமானால் CCCII என்று எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. 

ஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.

அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர். 


இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது. 

ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை. பின்னர் ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை. குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '௦௦௦0' இருந்தது ( தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது), இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)' என்ற எழுத்தை "ஒன்றுமில்லாததை(Void/empty place)" குறிக்க பயன்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்கு 302 ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று பயன்படுத்தி இருக்கிறார். 

ஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக)  கருத இல்லை. அதனை "ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place but didn't include it in the set of Numbers) " குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.

பதிவிற்கு வருவோம்....

சரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு கணிதத்தில்    பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது. 

ஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன் ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள் எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர். 

முஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க "சிபர் (sifr)" என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் "சிபர் (sifr)" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). 

அதாவது சைபரை (௦0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9  என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது. 

இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள்கொண்டுவரப்பட்டன.

அதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் "பத்து" என்றால் ஒன்று போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து பத்தொம்பது வரை எண்ணி பிறகு "இருபது" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம் அல்லவா, இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc....இன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள் தான்   அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக கணக்கிடப்பட்டன. 

"Hindu Mathematicians in Southern India first created zero but did not recognise it as Number. They used Zero only as a place holder when no number existed. Add 4+6, you get 10, one in tens column and 0 in one's column. The Hindus realised that they needed a way to indicate that there was no number in units position.
For 400 years, that was the only use of Zero. No one added, subracted, multiplied, or divided it. It was only used to hold an empty place for a missing Number. So, 2003 could be written differently than 2030 or 23.
Before 800 AD the Hindu number system migrated west into Arab world. There a brilliant Mathematician, Al-Khwarizmi, invented Zero as a Number. He realised that it has to be a number in order for the emerging system of algebric equation to work"  --- Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.
முஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது. 

அதுமட்டுமல்ல, "தசம பின்னல் (Decimal Fractions)" முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான். உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5  என்று உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான். 

பின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...   

ஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய 
  • எண்களாகட்டும் (0 to 9), 
  • எண்ணும் முறைகளாகட்டும் (10,30,8000...), 
  • கூட்டல் போன்ற செயல்களாகட்டும், 
  • தசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது                                                                                
இப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம். 

சிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:   

சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும்அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே. 


இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.      

இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி. 

தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.   

இந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள். 

2. அட்சர கணிதம் (Algebra)


இன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்கள்தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம் "கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on calculation by completion and balancing, 830 AD)". இந்த "அல்-ஜபர்" என்ற வார்த்தைதான் "அல்ஜீப்ரா" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில் மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் "அல்காரிதம் (Algorithm)" என்பது.மிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம் (Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி காட்டினார்.இவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது. 
  • சிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.  
  • அபுல் கமில் (Abul Kamil) அவர்கள் 
  • அபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...   
இவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.    


3. கேத்திர கணிதம் (Geometry) 
கணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.முஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள், பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள். அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர்.முஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது, அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால் சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி பெயர்க்குமளவு முஸ்லிம்கள் கணித அறிவை  கொண்டிருந்தனர்.முஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில் புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான்.முஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள் அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால் கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது.மொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில் காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.
"It had a large number of, geometrical problems for the fundamental construction of plane geometry to the constructions of the corners of a regular polyhedron on the circumscribed sphere of special interest is the fact that a number of these problems are solved by a single span of the compass, a condition which we find for the first time here." --- H.Suter 
இந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின் பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry).கேத்திர கணிதத்தில் "பை (Pi)" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள். 
"In 1424 Al-Kashi published a treatise on circumference, in which he calculated "pi", the ratio of a circle's circumference to its diameter, to nine decimal places. Nearly two hundred years would pass before another mathematician surpassed this achievement"
முஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று.இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • முஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள் 
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)
  • தபித் பின் குர்ரா (Thabit bin qurra)
  • அல்-இஸ்பாஹனி (Al-Isfahani)

4. கோணவியல் (Trigonometry)




கோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின் ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது.முதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவியலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். கோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான். 
"It was after this development in Islamic mathematics that the first real trigonometry emerged"             --- E. S. Kennedy       
  • சமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான். 
  • சைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.
  • டேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி..இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • அல் கரிஷ்மி (Al-Khwarizmi)
  • அல் பதானி (Al-Battani)
  • ஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • அபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)
  • அபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)
  • தகி அல்-டின் (Taqi Al-din)
  • ஜம்ஷெட் அல்-கசி (Jamshed al-Kashi)
  • ஓமர் கையாம் (Omar Khayyam)              

இப்படிப்பட்ட மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள், அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல் இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம் இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு, தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது. 
"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன. பல கோணங்களிலும், இன்று நாம் படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட  அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது"  --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics             
"Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics. Certainly many of the ideas which were previously thought to have been brilliant new conceptions due to European mathematicians of the sixteenth, seventeenth and eighteenth centuries are now known to have been developed by Arabic/Islamic mathematiciansaround four centuries earlier. In many respects the mathematics studied today is far closer in style to that of the Arabic/Islamic contribution than to that of the Greeks" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics
ஆக, கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகவில்லை.அப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர்.இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின்   இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொடங்கியே வான சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினர்.அவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம்.இங்கே நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள்.இதையெல்லாம் ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை? ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன? இறைவனே எல்லாம் அறிந்தவன். 
  • நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இனி இதைப்போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான் வந்துள்ளன.     

தற்போது நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்றது. உதாரணத்துக்கு,  நான் தனித்துவம் பெற்றுள்ள துறையில் (VLSI design, Semiconductor Physics) அதிக அளவிலான ஆய்வுக்கட்டுரைகள் முஸ்லிம்களால் சமர்பிக்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.அறிவியலின் பல்வேறு துறைகளிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்க ஏக இறைவன் உதவுவானாக...ஆமீன். இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...இறைவனே எல்லாம் அறிந்தவன்... My Sincere thanks to:1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada.References:1. Tamil translations of Mathematical terms taken from online Tamil dictionary site, tamildict.com.2. Islam: A thousand years of Faith and Power - Jonathan Bloom and Sheila Blair.3.ARAMCO and Its World: Arabia And The Middle East - Edited by Ismail I. Nawwab, Peter C. Speers & Paul F. Hoye.4. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America5. Arabic Mathematics: Forgotten Brilliance? - MacTutor History of Mathematics.6. Arabic-Hindu numerals - Encyclopedia Brittanica7. Origin of the Arabic Numerals: A natural history of numbers - Adel S.Bishtawi8. Marvels of Math: Fascinating reads and Awesome Activities - Kendall F.Haven9. Muslims Contribution to Mathematics - Shirali Kadyrov.10. Al-Khwarizmi Biography - Biography base.11. Muslims Contributions - Net Muslims
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் 
-AL-IHZAN-

المشاركات الشائعة